World Tamil Blog Aggregator Thendral: வீதி கூட்டம் -30

Sunday 28 August 2016

வீதி கூட்டம் -30

                                                                             வீதி
                                               கலை இலக்கியக்களம் கூட்டம்-30

 வீதி கூட்டம் இன்று ஆக்ஸ்போர்டு சமையற்கலைக்கல்லூரியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

வரவேற்புரை 

கவிஞர் ரேவதி அவர்கள்...

வந்திருக்கும் அனைவரையும் அன்புடன் வரவேற்றார்.

தலைமை உரை
      
                      கவிஞர் மூட்டாம்பட்டி ராசு அவர்கள் 

வீதிக்கு தலைமை ஏற்று சிறப்பு செய்தார்.


அண்மையில் மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு வீதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தனது உரையில் மனிதமும் மனிதநேயமும் மிகச்சிறந்த கவிஞர்களும்,வளரும் கவிஞர்களும் கொண்ட அமைப்பாக வீதி திகழ்கிறது..புதுகைக்கவிஞரான கந்தர்வனின் கவிதைகள் தமிழ்நாடெங்கும் பேசப்படுவதைக்கூறினார்...

கவிதைகள்

 1]கவிஞர் மலையப்பன்
                    ”குறிலாய் மட்டுமல்ல
                    நெடிலாயும் எரிக்கின்றது
                    சா[தீ]தி.”
மேலும் குழந்தை பற்றிய கவிதை,விளைநிலம் பற்றிய கவிதை வாசித்து பாராட்டு பெற்றார்.

2] கவிஞர் செல்வகுமார்
              புதுகையில் பேசப்படக்கூடிய கவிஞர்களில் ஒருவர் மீரா.செல்வகுமார் அவர்கள் அவர்களின் கவிதை.

பற்றும் விரல் நீயெனக்கு...

”ஒரு பட்ட மிளகாய்
உப்புச்சட்டி
கழுவிய தண்ணீர்.
ஒடிந்து விழுந்த
முருங்கையின் கீரை..
என் பட்டினி
கொன்றவளே...
எப்போதும்
பசியள்ளித்
தின்றவளே...
ஓரெழுத்தும்
அறியாத
என் தாயே!
உன் விரல்
பட்டு
படர்ந்ததுதான்
என்
தலையெழுத்து..
---------------------------”
 என்ற அம்மாவின் கவிதையை வாசித்து வீதியின் பாராட்டுகளை அள்ளினார்.

3]கவிஞர் மீனாட்சி சுந்தரம்

                  “தாகத்திற்கு தண்ணீரானாய்
                     --------------------------------------
                    தாயாய் நீயிருக்க
                   அன்னையாய் நானிருக்க ...
என்ற மகள் பற்றிய கவிதையை வாசித்தார்.

நூல் விமர்சனம்

தமிழாசிரியர் குருநாதசுந்தரம் அவர்கள் 

                      எழுத்தாளர் பூமணியின் நூலான ,சாகித்திய அகாதமியின் பரிசு பெற்ற ”அஞ்ஞாடி “நூலை மிகச்சிறப்பாக ...திறனாய்வு செய்தார்.
எப்பேர்பட்ட வரலாற்று நூல் என்பதை அவரது விரிவான திறனாய்வு பார்வை எல்லோருக்கும் எடுத்துக்கூறியது...
நாம் வாசிக்கும் நாவல்கள் சமூகத்தேடல்களை உருவாக்குபவையாக இருக்க வேண்டும்,நாவலை வாசிக்கும் தன்மையை மூன்று வகையாக கூறலாம் .முதலாவதாக வெறுமனே வாசித்தல்,இரண்டாவதாக சமூகத்தோடு பொருத்திப்பார்த்தல்,மூன்றாவதாக நாவலை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்வதான வாசிப்பு என்று கூறினார்.

தலித் இனம் பற்றிய பார்வை மிக மோசமானதாகவே இலக்கியங்களில் காட்டப்படும் ஆனால் பூமணி தலித் இனத்தைச்சார்ந்தவர்களின் உயரியத்தன்மையை எடுத்துக்காட்டுவதாக நாவலைப்படைத்துள்ளார்.கோட்பாடுகளில் அடக்க வேண்டுமாயின் சர்ரியலிச கோட்பாட்டில் இந்நாவல் அமைந்துள்ளது எனக்கூறி மிகச்சிறப்பாக ,அழகாக,விரிந்த பார்வையில் எடுத்துரைத்த விதம் ஒரு விமர்சனம் எப்படி இருக்க வேண்டும்,நாவலைக்காணும் முறை ஆகியவற்றைக்கூறுவதாக அமைந்தது.
அவர் நாவலை அறிமுகப்படுத்திய போது வீதியே கண்சிமிட்டாமல் கவனித்து கொண்டிருந்ததை மறுக்கவியலாது..

முன்னிலை :கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் 




                       தனது உரையில் மூட்டாம்பட்டி ராசு என்றாலே அவரது இரு வார்த்தைகள் காலத்தால் அழியாது மனதில் பதிந்த ”தாகசுகம்”என்ற வார்த்தைகளை மறக்க முடியாதெனக்கூறி,தலித்தியம் என்பது அடித்தட்டு மக்களின் பார்வையிலிருந்து பார்க்கும் பார்வைதான் என்றும் ஆதவன் தீட்சன்யாவின் மழைக்காலம் பற்றிய கவிதையைக்கூறினார்.

ஆய்வுரை 

        முனைவர் மகா.சுந்தர் அவர்கள்

                ”வழக்குரைக்காதை ஒரு மீள்பார்வை”என்ற நோக்கில் அவரது ஆய்வை எடுத்துரைத்தார்..இளங்கோவடிகள் சமணத்துறவியாக சிலப்பதிகாரத்தில் வெளிப்படும் இடங்களையும்,படைப்பாளியாக வெளிப்படும் இடங்களை எடுத்துக்காட்டிய விதம் மிக அருமை.தற்கால வழக்காடும் முறை எப்படி அக்காலத்திலேயே இருந்ததை எடுத்துக்காட்டினார்.

பாண்டிய மன்னின் தீர்ப்பிலிருந்து 

                                       வழக்கு -யானோ கள்வன்?
                                       தீர்ப்பு -யானே கள்வன்!
                                       தண்டனை -கெடுக என் ஆயுள்!

புதுப்புது செய்திகளைப்படிக்க படிக்க தரக்கூடிய அறிவுச்சுரங்கமாக சிலப்பதிகாரம் இருந்ததை மிகச்சிறப்பாக ஆய்வுரையை நிகழ்த்தினார்.

கட்டுரை-புரட்சித்துறவி
                      தமிழாசிரியர் கு.ம.திருப்பதி அவர்கள் 


             தனது கட்டுரையில் தற்கால ஈஷா யோகா நிலையச்சீர்கேடும்,தனிமனிதனாக இறந்த தன்மனைவியைத் தூக்கிக்கொண்டு வந்த மனிதனின் நிலையுமே இக்கட்டுரை எழுதக்காரணம் என்று கூறினார்.

சுதந்திரத்திற்காகப் போராடிய வ.வே.சு அய்யர் அமைத்த ஆசிரமத்தில் தலித்களுக்கு தங்க அனுமதியில்லை...

அன்னிபெசண்ட் அம்மையாரால் நிறுவப்பெற்ற பிரம்மசமாஜத்திலும் அவர்களுக்கு அனுமதி இல்லை.

ஆனால் 1800 நூற்றாண்டில் வாழ்ந்த வெள்ளாடை அணிந்த மாமுனி மனிதர்களுக்காக மனித நேயம் தழைக்க....வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன் என்று உலகில் தேவை இரக்கம் ஒன்று மட்டுமே...அவர் பசிப்பிணியைப் போக்குவதையே முதன்மை நோக்கமாகக்கொண்டதற்கு காரணம் அக்காலத்தில் பஞ்சங்களால் மில்லியன் கணக்கில் மக்கள் இறந்ததால் பசி நோயைத்தீர்ப்பதையே அவரது குறிக்கோளாகக்கொண்டிருந்தார்.

உலகமெல்லாம்  ஒருமை என உலகையே ஒன்ராக நினைத்தவர் வள்ளளார் என்று மக்களால் அழைக்கப்பட்ட இராமலிங்க அடிகளார் அவர்கள்

”கண்மூடிப்பழக்கமெல்லாம் மண்மூடிப்போக என்றார்.” அதனால் அவரது பெருமை அழிக்கப்பட்டுவிட்டது.
ரிக் வேதத்தில் பாவத்தின் பலன் பசி நோய் அதை நீ தீர்த்தால் நீயும் பாவியாவாய் என்கிறதாம்...

வேதம் ,மதம் ,சமயம்,சாதி அனைத்து பொய் என 1800 ஆண்டிலேயே கூறிய மகான் என்றும் தற்காலத்தில் மிகவும் அடிப்படைத்தேவையாக உள்ளது
                ”உயிர்களிடத்தில் காட்டவேண்டிய இரக்க குணம் ஒன்றே”என்றும் தனது கட்டுரையை மிகச்சிறப்பாக படைத்தார்.

சிறுகதை-கருகித்தளிர்த்த துளிர்.

கவிஞர் மாலதி அவர்கள் 


தனது சிறுகதையில் கருப்பொருளாக சிறுவயதில் பாதிக்கப்பட்ட குழந்தையை எடுத்துக்கொண்டு அக்குழந்தை வாழ்வின் சிக்கல்களைச்சந்தித்து வெற்றி பெறுவதை தனது சிறுகதையில் காட்டிய விதம் சிறப்பு.

பாடல் -கவிஞர் இந்துமதி

பாரதியாரின்”காக்கைச்சிறகினிலே”பாடலை இனிமையாகப்பாடி வீதிக்கு இனிமை சேர்த்தார்.

சிறப்பு விருந்தினர்-கவிஞர் விச்வநாதன் தஞ்சை 





தனது உரையில் பாலாவின் நண்பர்,பாலக்குமாரனின் நண்பர் என்றும் தன்னைக்கூறியதுடன்...கவிதைப்பற்றி கூறுகையில்
 “எது மனதில் நிற்கிறதோ அது கவிதை “என்றார்.இதுவரை 9 புத்தகங்கள் எழுதியுள்ளேன்,தமிழக அரசின் ஒரு புத்தகத்திற்கு வாங்கியுள்ளேன் என்றும் கூறி...எழுத்தாளர்கள் இக்காலத்தில் மதிக்கப்படுவதே இல்லை என்று தனது ஆதங்கத்தைக்கூறினார்.
வங்கதேசத்தில் கவிஞர்கள் எவ்வாறு மதிக்கப்படுகிறார்கள் என்று கூறிய போது பெருமையாக இருந்தது அந்நாட்டை நினைக்கும் போது.

வீதி இத்தனை மாதங்களாக செயல்பட்டுக்கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று என்று பாராட்டினார்.

அறிமுகம் -
                     ”மேல் நாட்டு மருமகள்” என்ற படத்தின் 
இயக்குனர் ஷாஜகான் 
 வீதியால் புதுகைக்குப்பெருமையா?புதுக்கோட்டையால் வீதிக்கு பெருமையான்னு தெரியல என்று கூறி சிறிய கதை ஒன்றை கூறி தனது சினிமாத்தேடலைப்பற்றி ஒப்பீடு செய்தார்.
அவர் மகளுக்கு எழுதிய கவிதை கூறி மகிழ்ந்தார்.

பாராட்டு-கவிராசன் அறக்கட்டளை வழங்கும் நல்லாசிரியர் விருதைப்பெற உள்ள கவிஞர் மாலதியைப்பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

நன்றி திருச்சியிலிருந்து வந்து வீதியில்  கலந்துகொண்ட திருமிகு தமிழ் இளங்கோ மற்றும் கறம்பக்குடியிலிருந்து வந்து கலந்து கொண்ட ஆசிரியர்கள் இந்துமதி,சாமி ஆகியோருக்கு மனம் நிறைந்த நன்றி.

நன்றியுரை கவிஞர் பவல்ராஜ்

வீதிக்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

இம்மாதக்கூட்டத்தினை அமைப்பாளர்களான கவிஞர் பவல்ராஜ்,கவிஞர் ரேவதி ஆகியோர் மிகச்சிறப்பாக நடத்தினர்.அவர்களுக்கு வீதி தனது வாழ்த்துகளைக்கூறிக்கொள்கின்றது.






 

7 comments :

  1. மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.,

    ” வீதி “., தமிழின் விதியை மாற்றும்.., என்றும் நல் வாழ்த்துக்களுடன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி சார்.

      Delete
  2. திருச்சியிலிருந்து பதிவர் தமிழ்இளங்கோ அவர்கள் வந்திருந்ததையும், அடுத்த மாத வீதிக் கூட்ட அமைப்பாளர்களாக கவிஞர்கள் மாலதி, சோலச்சி இருவரும் ஏற்றுள்ளதையும் சேர்த்து மகிழ்வோம். (படங்களைக் கொஞ்சம் கழுவியிருக்கலாம் ல.?) என்றாலும் உடனடிப் பதிவு பாராட்டுக்குரியது ம்மா.

    ReplyDelete
  3. நிகழ்ச்சியைத் தொகுத்து தந்தமைக்கு நன்றி சகோதரி. நான் கலந்து கொள்ள முடியாத ஆதங்கம் தவிர மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைகின்றேன். விரைவில் சந்திப்போம்.

    ReplyDelete
  4. நல்லதொரு தொகுப்பு. பாராட்டுகள்.

    அனைத்து வீதி தோழர்களுக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...